பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான வேலைவாய்ப்பு முகாம்
பட்டியல் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை, பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கான தேசிய பணி சேவை மையம், இந்திய அரசு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துடன் இணைந்து , சென்னை சாந்தோமில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி தலைமை இயக்குநரகம், 2021 ஏப்ரல் 26 அன்று தனது அலுவலக வளாகத்தில் நடத்துகிறது.
2021 ஏப்ரல் 26 அன்று காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கான தேசிய பணி சேவை மையம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி தலைமை இயக்குநரகம், 56, குயில் தோட்டம் சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை (மாநில வேலைவாய்ப்பு கட்டிடம், மூன்றாவது மாடி) வளாகத்தில் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும்.
பிபிஓ, வங்கிகள், காப்பீடு, மின் வணிகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், விளம்பரம் மற்றும் வேகமாக விற்பனை ஆகக்கூடிய நுகர்வோர் பொருட்கள், மனித வளம், சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை ஆகிய துறைகளில் அனுபவம் உள்ளோர் மற்றும் அனுபவம் இல்லாதவர்களுக்கும் காலியிடங்கள் உள்ளன.
மாதத்திற்கு ரூபாய் 10,000 முதல் ரூபாய் 30,000 வரை ஊதியம் வழங்கக் கூடிய வேலைகளாக இவை இருக்கும். 22 முதல் 35 வயது வரை உள்ள வேலை தேடும் இளைஞர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது சுய விவரக் குறிப்பு, கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டும்.
மேற்கொண்டு தகவல்கள் எதுவும் தேவைப்பட்டால் 044-24615112 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட சரியான கொவிட் நடத்தை விதிமுறையை முகாமில் பங்கேற்கும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
மேற்கண்ட தகவல்களை செய்திக்குறிப்பு ஒன்றில், திரு சுஜித் குமார் சாஹு, துணை மண்டல வேலைவாய்ப்பு அலுவலகம், பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கான தேசிய பணி சேவை மையம், சென்னை, தெரிவித்துள்ளார்.
கருத்துகள்