உச்சநீதிமன்றத் தீர்ப்பு:
முதுநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை
முழுமையாக மாற்றி வெளியிடவேண்டும்
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் நியமனத்தில், தகுதி அடிப்படையில் பொதுப்பிரிவில் தேர்ச்சி பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களை, பொதுப்பிரிவில் சேர்க்காமல், இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
தமிழக அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வுகள் 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டு, அவற்றின் முடிவுகள் கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்டன. வேதியியல் ஆசிரியர்கள் நியமனத்தில் அதிக மதிப்பெண் பெற்று பொதுப்பிரிவில் நியமிக்கப்பட வேண்டிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பின்னடைவு பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டனர். அதனால், பின்னடைவுப் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறசெயலால் வேதியியல் பாட ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 34 பேருக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பின்னடைவுப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.சி மாணவர்களை, பொதுப்பிரிவுக்கு மாற்றிவிட்டு, பின்னடைவுப் பணியிடங்களில் தர வரிசையில் அடுத்த நிலையிலுள்ள எம்.பி.சி. மாணவர்களை நியமிக்க ஆணையிட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டை விசாரித்த சஞ்சய்கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து நிராகரித்திருக்கிறது‘பின்னடைவுப் பணியிடங்களுக்கும், நடப்புக் காலியிடங்களுக்கும் ஒரே நேரத்தில் போட்டித் தேர்வு நடத்தப்படும் போது, அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் எந்த சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பொதுப்பிரிவில் சேர்க்கப்பட வேண்டும். அடுத்த நிலையில் உள்ளவர்கள் பின்னடைவுப் பணியிடங்களுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும், மூன்றாவது நிலையில் நடப்புக்காலியிடங்களுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், அதிக மதிப்பெண் பெற்ற எம்.பி.சி மாணவர்களை பொதுப்பிரிவில் சேர்க்காமல் பின்னடைவுப் பணியிடங்களுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்தது பெருந்தவறு. இத்தவறு சரி செய்யப்பட வேண்டும். எம்.பி.சி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்படுவது பிற சமூகத்தவரின் உரிமைகளை எந்த வகையிலும் பறிக்காது என்று சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு பல முன்னுதாரங்களை சுட்டிக்காட்டி தீர்ப்பில் கூறியிருக்கிறது.
கருத்துகள்