பேருந்துகளில் பணி ஒதுக்கீடு செய்ய ரூ. 5,000 இலஞ்சம்: தொ.மு.ச., செயலாளர் பணிநீக்கம்.
:சேலம் கோட்டம் அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில் பணி ஒதுக்கீடு செய்ய, 5,000 ரூபாய் இலஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட, தொ.மு.ச., செயலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே மானாத்தாள் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம், (வயது 48). இவர், தாரமங்கலம் பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிவதோடு, அங்கிருந்து திருவாரூருக்கு இயக்கப்படும் பேருந்தில், ஓட்டுனராகவும் பணிபுரிகிறார். ஆட்சி மாற்றத்துக்கு பின், அதே பேருந்தில் தொடர்ந்து ஓட்டுநராகப் பணியாற்ற விரும்பி. அதற்காக பணிமனையில், தொ.மு.ச., செயலாளராகப் பணியாற்றும், மேட்டூர் அருகே கோல்காரநூர் வளவைச் சேர்ந்த குணசேகரன், (வயது 47), என்பவரை அணுகினார். அவர் திருவாரூரில் பேருந்தில் பணி ஒதுக்க, 5,000 ரூபாய் இலஞ்சமாகக் கேட்டுள்ளார். இது குறித்து சேலம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜிடம், பரமசிவம் புகார் அளித்தார்.
இலஞ்ச ஒழிப்புத் துறையினர் அறிவுரையின்படி, பினாப்தலின் இரசாயனப் பொடி தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை தாரமங்கலம் பேருந்து நிலையம் அருகே கிராம நிர்வாக அலுவலகம் அருகில் வைத்து குணசேகரனிடம் பரமசிவம் வழங்கிய போது அங்கு மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் முருகன், நரேந்திரன் தலைமையிலான காவலர்கள் குணசேகரனைக் கைது செய்ததையடுத்து, ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் அளித்த அறிக்கையை ஏற்று, நேற்று குணசேகரனை பணி நீக்கம் செய்து, சேலம் மண்டலப் பொது மேலாளர் லட்சுமணன் உத்தரவிட்டார்.
கருத்துகள்