திருச்சிராப்பள்ளி துணை ஆட்சியர் காரில் சிக்கிய ரூ. 40 லட்சம் லஞ்ச பணம் தொடர் விசாரணை.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியரின் காரில் கட்டுக்கட்டாக ரூபாய்.40 லட்சம் சிக்கியது. சென்னைக்குச் சென்ற வழியில் விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் காரை மறித்துச் சோதனை நடத்தியதில் பணம் சிக்கிய நிலையில் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் துணை ஆட்சியராகப் பணியாற்றுபவர் சரவணகுமார்( வயது 52 ). இவர் தனது காரில் சென்னை நோக்கிப் பயணித்தார். மணி காரை ஓட்டினார். அவரது காரில் கட்டுக்கட்டாக பணம் செல்வதாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இலஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் வந்தது விழுப்புரம் இலஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான காவலர்கள் விழுப்புரம் மாவட்ட எல்லை கெடிலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துணை கலெக்டர் சரவணகுமார் வந்த காரை மறித்துச் சோதனையிட்டனர்.
காரில் அவரது இருக்கையினருகில் இருந்த கட்டைப் பையில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக ரூ.40 லட்சமிருந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறவே துணை ஆட்சியர் சரவணகுமார் மற்றும் ஓட்டுநர் மணி ஆகியோரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போது, பணத்திற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. இதனால் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்தப் பணம் சென்னையில் உயர் அதிகாரிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டதா என்று பல கேள்விகளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரிடம் துருவித் துருவி கேள்வி கேட்டனர். அதற்கு சரவணகுமார் சரியாகப் பதில் கூறவில்லை.
இது குறித்து வரும் தகவல் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் உள்ள விடுதிகளில் சமையலர், உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு ஆள் தேர்வு நடைபெற உள்ளதாகவும், அதற்கு ஒவ்வொரு பணியிடங்களுக்கும் வசூல் வேட்டை நடந்ததாகவும் அதில் கையூட்டு வந்த பணத்தை காரில் கொண்டு வந்ததையடுத்து இந்த சோதனை எனத் தெரிகிறது.
எனவே இது லஞ்சப் பணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்து, இவரது நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், இவரை சென்னை செல்லும் வழியில் மடக்கிய தில் பணத்துடன் சிக்கி உள்ளதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து ஓட்டுநர் மணியிடமும் விசாரணை நடத்தினர். மூன்று மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தப்பட்டு அவரை அனுப்பி வைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கார் பறிமுதல் செய்யப்பட்டதுடன். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இலஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கக் கொண்டு சென்றதாக ஒப்புதல் அவர் அளித்த வாக்குமூலம்:
விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் சிக்கிய திருச்சிராப்பள்ளி மாவட்ட துணை ஆட்சியர் சரவணகுமாரிடம் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான காவலர்கள் விசாரணை நடத்தியதில் இந்தப் பணம் எங்கிருந்து வந்தது, யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று துருவித் துருவி விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த சரவணகுமார் பின்னர், சென்னை ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றும் கலைமோகன் என்பவருக்கு இலஞ்சமாகக் கொடுக்க கொண்டு சென்றதாகத் தெரிவித்துள்ள காரணமாக இதில் உயர் அதிகாரிகளுக்கு பங்கு இருக்கும் நிலை உண்டா என்பது வழக்கு நகர்வில் தெரியும்..
கருத்துகள்