விடுதலைப் போராட்டத்தில் மகளிரின் தியாகங்கள் மகத்தானவை: புதுக்கோட்டை புகைப்பட கண்காட்சி தொடக்க விழாவில் அமைச்சர் எஸ். ரகுபதி பேச்சு
நமது நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் மகளிர் செய்துள்ள தியாகங்கள் மகத்தானவை என்று தமிழ்நாடு சட்டம், நீதிமன்றங்கள், சிறைத்துறை மற்றும் ஊழல் தடுப்புத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள மத்திய மக்கள் தொடர்பகம், புதுக்கோட்டையில் ஏற்பாடு செய்துள்ள மக்கள் நல திட்டங்கள் மற்றும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய புகைப்பட கண்காட்சியை இன்று (செப்டம்பர் 22) தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றிய அமைச்சர், உலகம் போற்றும் மகாத்மா காந்தியடிகளின் அகிம்சை, மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை ஆகியவற்றை கொண்டதுதான் இந்தியா என்றார். இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கும் அளவுக்கு இந்தியா வல்லமை பெற்றிருந்தது என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.
அறியப்படாத விடுதலைப் போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சியோடு மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நல திட்டங்களை விளக்கும் கண்காட்சியும் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் அமைச்சர் வழங்கினார்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் திருமதி கவிதா ராமு, இந்த கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறுவதாக கூறினார். அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய நிறைய தகவல்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருப்பதாகவும், இவற்றை பள்ளி, கல்லூரி மாணவர்கள் குறிப்பெடுத்து பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் நோக்கவுரையாற்றிய சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் திரு எம். அண்ணாதுரை, தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் உள்ளனர் என்றாலும், அவர்களின் ஒரு சிலர் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு புகைப்பட கண்காட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார். பாடநூல்களில் கூட கிடைக்காத இத்தகைய அரிய தகவல்களை மாணவர்கள் படித்து, பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்கள் பற்றிய தகவல்களை இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் அறிந்து கொள்வதோடு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திருமதி திலகவதி செந்தில், துணைத்தலைவர் திரு எம் லியாகத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய மக்கள் தொடர்பக தஞ்சாவூர் கள அலுவலகத்தின் கள விளம்பர அலுவலர் திரு கே. ஆனந்தபிரபு வரவேற்றுப்பேசினார். இந்த அலுவலகத்தின் கள விளம்பர உதவியாளர்
கே. ரவீந்திரன் நன்றி கூறினார்.
இந்த கண்காட்சியையொட்டி கிராமிய கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கருத்துகள்