திருவண்ணாமலை திருக்கோவில் திருகார்த்திகை தீபத் திருவிழா
இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸதலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான திருவண்ணாமலை. உலகப் புகழ் பெற்ற அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும்.
அதில் வெள்ளி மூஷீக வாகனத்தில் உலா வந்த விநாயகர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளை திரளான மக்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி அண்ணாமலையார் கோவில் கருவறையின் முன்பாக பரணி தீபமும், மாலை கோவில் பின்புறமுள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் உச்சியில் மாஹா தீபமும் ஏற்றப்படவுள்ளது.
நடப்பாண்டுக்கான தீபத் திருவிழா நகரின் காவல் தெய்வமான துர்கை அம்மனின் உற்சவத்துடன் துவங்கியது. நேற்று விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் சுவாமிகள் வெள்ளி மூஷீக வாகனத்தில் மாட வீதியில் வீதி உலா வந்தனர்.விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு பால், தயிர், வாசனைத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீபாராதனைகள் நடைபெற்றது. வீதியில் நடந்த உலாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை அண்ணாமலையார் கோவிலிலுள்ள 63 அடி உயர தங்க முலாம் பூசிய கொடி மரத்தில் கார்த்திகைத் தீபக் கொடியேற்றம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகைத் தீபத்திருவிழா இன்று தொடங்கி வரும் டிசம்பர் மாதம் ஆறாம் தேதி வரை பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி உள்நாட்டின் வெளி மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்கள் மற்றும் அயல் நாடுகளிலிருந்து 50 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது
திருக்கார்த்திகை தீபத்திருவிழாக் கொடியேற்றத்தினை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறறதைத் தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் கொடிமரம் அருகில் எழுந்தருளிய நிகழ்ச்சி .
அதிகாலை 5.30 மணியளவில் தொடங்கி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள், முழங்க பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோஹரா என முழக்கமிட கோவிலிலுள்ள 63 அடி உயரத் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
கொடியேற்ற விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையார் அசோக்குமார், திரைப்பட நடிகர் மயில்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இனி தொடந்து பத்து நாட்கள் காலையில் விநாயகர், சந்திரசேகரர் மற்றும் இரவில் பஞ்சமூர்த்திகளின் மாடவீதியுலா நடைபெறும். டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி அதிகாலையில் கோவிலின் கருவரையின் முன்பாக பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும்.சிவ வழிபாட்டில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குகிறது திருவண்ணாமலை. உலகப் புகழ் பெற்ற அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீப திருவிழா நடைபெறும்.
திருஅண்ணாமலையார் கோயில் எனவும் அருணாசலேஸ்வரர் கோவில் எனவும் அறியப்படும் ஸ்தலம், தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டு ஸ்தலங்களிலும், திருவாசகத் திருத்தலங்களிலும் ஒன்று எனப் பெருமையினைப் பெற்றது. இங்கு மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என அழைக்கப்படுகிறார். பிரம்மாவிற்கும் திருமாலுக்கும் யார் பெரியவர் என வாக்குவாதம் எழ, இடையில் நெருப்புப் பிழம்பு தோன்ற 'நம்மில் யார் இதன் அடியையும் முடியையும் கண்டறிபவரே, நம்மில் பெரியவர்' என உரைத்தனர். அதன் அடியைக் காண, திருமால் வராக (பன்றி) அவதாரமெடுத்து நிலத்தினைக் குடைந்து சென்று பன்னெடுங்காலம் பயணம் செய்தும் அடியைக் காண இயலாமல் திருமால் திரும்ப, அன்ன வடிவமெடுத்து முடியைக் காணச்சென்ற பிரம்மன், வானிலிருந்து கீழே வரும் தாழம்பூவிடம் இது யாதென வினவ அதற்கு இது சிவபெருமானெனவும், நான் சிவனாரின் தலையிலிருந்து பல ஆண்டுகளாக விழுந்துக் கொண்டிருக்கிறேன் என உரைத்த தாழம்பூவிடம் நீ திருமாலிடம், நான் இந்த நெருப்புப் பிழம்பாக நின்ற சிவனின் முடியைக் கண்டுவிட்டேன்
எனக் கூறும்படி கேட்டார் பிரம்மன். தன்னால் அடியைக் கண்டறிந்தளக்க முடியாததை ஒப்புக் கொண்ட திருமாலிடம், பிரம்மன் நான் பகிரதனுக்காக ஆகாயகங்கையைத் தனது செஞ்சடையில் தாங்கி சிவகங்கை எனப் பெயர் மாற்றிய சிவபெருமானின் முடியைக் கண்டுவிட்டதாகவும், அதற்கு இந்தத் தாழம்பூவே சாட்சி என உரைத்தும் நீ எனக்கு ஒரு குழந்தைக்கு ஒப்பானவனெனக் கூறி எள்ளிநகையாடியதால், ஆத்திரமுற்ற சிவன், பத்மகற்பத்தில் பிரம்மன் திருமாலின் உந்தி கமலத்தில் தோன்றுவாரெனவும், தாழம்பூ சிவபூசையில் இனிமேல் பயன்படாதெனவும் உரைத்தார். தாழம்பூ, தன்னிடம் மன்னிப்பு கேட்டதற்கிணங்கிய சிவன் நான் புவியில் எனது பக்தைக்காகக் குழந்தையாக அவதரித்த உத்திர கோசமங்கையெனும் திருத்தலத்தில் மட்டும் பயன்படுவாயெனவும் அருளினார். திருமாலால் தன்னை அளக்க இயலாததால் திருமாலை சிறியவரென உரைப்பார்களெனவும், பிரம்மா கேட்ட மன்னிப்பினால் அவருக்கு வழிபாடு நிகழவேண்டி சிவபெருமான் சிவலிங்கத்தின் அடிப்பாகத்தில் பிரம்மர், நடுப்பாகத்தில் திருமால், மேல்பாகத்தில் சிவனும் நின்று சிவலிங்கமாகத் தோன்றினர். தன்னை நோக்கித் தவமியற்றிய பார்வதியைத் தன்னுடைய இடப்பாகத்தினிலமர்த்தி அர்த்தநாரீஸ்வரராய் (கருவறையின் பின் புறம் ஐம்பொன் சிலை உள்ளது) நின்ற பெருமைக்கு உரியது இந்த ஸ்தலமாகும். "திருஅண்ணாமலையை நினைக்க முக்தி" என்று பக்தர்களால் போற்றப்படும் சிறப்பு வாய்ந்த ஸ்தலமிது.
இத்தல நால்வரால் பாடல் பெற்ற தேவாரப் பதிகங்களைப் பாடிய நிகழ்வுகள் உள்ள ஸ்தலத்தின் மூலவர் சிவபெருமான் என்றாலும், இங்குள்ள முருகன் மீது அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ் பாடல்கள் உண்டு . இங்குள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். இதனால் இம்மலையை வலம் வருதலைக் கடைபிடிக்கின்றனர். இவ்வாறு கிரிவலம் வருகின்றனர் எண்ணற்ற சித்தர்கள் இங்கு வந்து வாழ்ந்து சமாதியடைந்துள்ளார்கள். அவர்களில் ரமண மஹரிஷி, சேசாத்திரி சாமிகள், விசிறிச் சித்தர் யோகிராம் சுரத்குமார சாமிகள், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் சமாதிகள் கிரிவலப் பாதையில் அமைந்துள்ளன.
முக்தி தரும் ஸ்தலங்களில் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் என்பது சிவ பக்தர்கள் நம்பிக்கையாகும்.திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோவிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் பக்தர்கள் மலையைச் சுற்றிவர இரு வழிகள் உள்ளன. மலையை ஒட்டிச் செல்லும் வழியில் பாறைகள், முட்கள் மிகுந்த கடினப் பாதையாகும்.
மலையைச் சுற்றியுள்ள பாதை ஜடாவர்ம விக்கிரம பாண்டியனால் பொது ஆண்டு 1240 ல் திருப்பணி செய்யப்பட்டது.
பொதுவாக மக்கள் வலம் வரும் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், வருண லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்களும், எட்டுத் திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது.
அஷ்டலிங்கங்கள் தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலையில் கிரிவலப்பாதையில்தான் அமைந்துள்ளது. மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர். திருவண்ணாமலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக ஐதீகம்.
மலையை வலம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும், காரணம் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாகவுமஹ ஐதீகம். தற்போது ஆலயம் மின் அலங்காரத்தால் ஜொலிக்கும் காட்சிகள் அழகு.
கருத்துகள்