பெங்களூரு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள துறவி கவிஞர் ஸ்ரீ கனகதாசர், மகரிஷி வால்மீகி சிலைகளுக்கு பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
பெங்களூரு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள துறவி கவிஞர் ஸ்ரீ கனகதாசர் மற்றும் மகரிஷி வால்மீகி சிலைகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஸ்ரீ கனகதாசருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“இன்று, கனகதாச ஜெயந்தியை முன்னிட்டு, பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கனகதாசர் சிலைக்கு நான் மரியாதை செலுத்தினேன். பக்தியின் பாதையை நமக்குக் காட்டியதற்காகவும், கன்னட இலக்கியத்தை வளப்படுத்தியதற்காகவும், சமூக ஒற்றுமைக்கான செய்தியை வழங்கியதற்காகவும் அவருக்கு நாம் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்’’.
மகரிஷி வால்மீகிக்கு மரியாதை செலுத்தியது குறித்தும் பிரதமர் ட்விட்டரில் பதிவை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடியுடன் கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட் உள்ளிட்டோர் இருந்தனர்.மைசூரு - புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் & காசி பாரத் கௌரவ் ரயில்களை பிரதமர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
மைசூரு மற்றும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது நாட்டில் தொடங்கப்பட்ட ஐந்தாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பதுடன் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலாகும். பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் பாரத் கௌரவ் காசி தர்ஷன் ரயிலையும் பிரதமர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
'மேக் இன் இந்தியா' வெற்றிக்கு ஒரு சிறந்த உதாரணமாக, இந்திய ரயில்வே இந்தியாவின் முதல் உள்நாட்டு அதிவேக ரயில்- வந்தே பாரத் எக்ஸ்பிரஸை அறிமுகப்படுத்தியது, இது கான்பூர்- அலகாபாத்-வாரணாசி வழித்தடத்தில் பிரதமரால் பிப்ரவரி 15, 2019 அன்று புது தில்லியில் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. மேலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புது தில்லி- மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, காந்திநகர் - அகமதாபாத் - மும்பை சென்ட்ரல், மற்றும் ஆம்ப் ஆண்டௌரா - புது தில்லி வழித்தடங்களில் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த புதிய ரயில், தொழில்துறை மையமான சென்னைக்கும், தொழில்நுட்ப-மென்பொருள்-தொடக்க மையமான பெங்களூரு மற்றும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான மைசூருவுக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்தும். மைசூரு - பெங்களூரு - சென்னையில் பயணம் செய்யும் வழக்கமான பயணிகள் தவிர, மென்பொருள் மற்றும் வணிக வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் இதனால் பயனடைவார்கள். இது விமான சேவை போன்ற வசதியை வழங்குவதுடன் ரயிலில் புதுமையான பயண அனுபவத்தை வழங்கும்.
மைசூரு- சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நேரம்
சென்னையிலிருந்து காலை 5.50-க்கு புறப்படும் ரயில், காட்பாடி ரயில் நிலையத்தை காலை 7.21-க்கு சென்றடையும். அங்கிருந்து 7.25-க்கு புறப்பட்டு, பெங்களூரு நகரத்தை காலை 10.20 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து 10.25க்கு புறப்பட்டு, மைசூருவை மதியம் 12.20 மணிக்கு அடையும்.
மறுமார்க்கத்தில், மைசூருவிலிருந்து பகல் 1.05 மணிக்கு புறப்பட்டு, சென்னையை இரவு 7.30 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் பெங்களூருவை 2.55 க்கும், காட்பாடியை மாலை 5.36க்கும் வந்தடையும். இந்த ரயில் பெங்களூரு ரயில் நிலையத்தில் 5 நிமிடங்களும், காட்பாடி நிலையத்தில் 4 நிமிடங்களும் நிற்கும்.
எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து மைசூருக்கான இருக்கை ரூ.1200. உயர்வகுப்பு கட்டணம் ரூ.2295. மைசூருவில் இருந்து எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு சாதாரண கட்டணம் ரூ. 1365 .உயர் வகுப்பு கட்டணம் ரூ. 2485.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சலுகை கட்டணங்களோ, குழந்தை கட்டணமோ அனுமதிக்கப்படாது. வயது வந்தோருக்கான முழு கட்டண டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். முன்பதிவு செய்தல், ரத்து செய்தல், பணத்தைத் திரும்பப் பெறுதல் போன்றவற்றுக்கான பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் சதாப்தி ரயில்களின்படி இருக்கும்.
பெங்களூருவில் 108 மீட்டர் உயரம் கொண்ட திரு நடபிரபு கெம்பேகவுடாவின் வெண்கலச் சிலையை பிரதமர் திறந்து வைத்தார்
பெங்களூருவில் திரு நடபிரபு கெம்பேகவுடாவின் 108 மீட்டர் உயரமுள்ள வெண்கலச் சிலையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். சிலைக்கு பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் அருகில் மரக்கன்று ஒன்றையும் நட்டார்.
பெங்களூரு நகரத்தை உருவாக்கிய நடபிரபு கெம்பேகவுடாவின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இந்த சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஒற்றுமை சிலை புகழ் ராம் வி சுதார் இதனை வடிவமைத்து, 98 டன் வெண்கலம் மற்றும் 120 டன் எஃகு மூலம் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“பெங்களூருவை உருவாக்குவதில் திரு நடபிரபு கெம்பேகவுடாவின் பங்கு ஈடு இணையற்றது. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் நலனை எப்போதும் முன்னிறுத்திய தொலைநோக்கு பார்வையாளராக அவர் நினைவுகூரப்படுகிறார். பெங்களூரில் ‘செழிப்பின் சிலை’யை திறத்து வைத்ததில் பெருமை அடைகிறேன்’’.
இந்த நிகழ்ச்சியில், பிரதமருடன் கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்