பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்: தமிழ்நாடு முழுவதும் 1.20 லட்சம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்த காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அக்டோபர் மாதம் கோயமுத்தூரில் நடந்த கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு தீவிரமாக கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அதோடு கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்து மேலும் பரபரப்பானதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், டிசம்பர் 6-ஆம் தேதி தமிழ்நாட்டிலஹ சுமார் 1.20 லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அதற்கான அறிவுறுத்தல்கள் காவல்துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு அந்த இரண்டு மாவட்டங்களிலும் கூடுதல் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் 15 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய இரயில் நிலையங்களிலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. மேலும், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், பெரியமேடு, பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் டிசம்பர் மாதம் .6-ஆம் தேதி காவல் ரோந்துப்பணியைத் தீவிரப்படுத்த காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக துணை ஆணையர்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தாம்பரம், ஆவடி காவல்துறை ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.இன்று (டிசம்பர்.5) இரவு முதல் சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்புப் பணிகளை காவல்துறை தீவிரமாக மேற்கொள்ள உள்ளனர். தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் மக்கள் கூடுமிடங்கள் உள்ளிட்டவற்றில் சந்தேகத்துக்கிடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பதைக் கண்டறிய சோதனை நடத்தப்பட உள்ளது. வாகன சோதனையை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, கோவில்கள், கிறிஸ்தவத் தேவாலயங்கள், மசூதிகள் உட்பட மக்கள் கூடும் வழிபாட்டுத் தலங்கள் அனைத்திலும் பாதுகாப்புப் பணியை காவல்துறையினர் இப்போதே தீவிரப்படுத்தியுள்ளனர்.
கருத்துகள்