நாடு முழுவதும் உள்ள பிரதமரின் உழவர் பாதுகாப்பு மையங்களைச் சேர்ந்த 9000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் சில்லரை வணிகர்களுடன் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா காணொலி மூலம் கலந்துரையாடினார்
விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்று தான் சில்லரை உரக்கடைகள், பிரதமரின் உழவர் பாதுகாப்பு மையங்களாக மாற்றப்பட்டதாகும். இந்த மையங்கள் விவசாயம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒரு முனையமாகவும், நவீன கண்டுபிடிப்புகளை பரப்பும் வகையிலும், சிறந்த நடைமுறைகள் வேளாண் அறிவு, தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை விவசாயிகளிடம் கொண்டு செல்லும் வகையிலும் செயல்பட்டு வருகின்றன. உற்பத்தி செலவை குறைத்து விவசாயிகளின் உற்பத்தி திறனை அதிகரிப்பதே மத்திய அரசின் நோக்கமாகும். இந்த வழியில் உழவர் பாதுகாப்பு மையங்கள், விவசாயிகள் தங்களது வருமானத்தை இருமடங்காக பெருக்கிக் கொள்ளும் வகையில் உதவுவதுடன், இந்தியாவின் உணவுப் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ளன என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ராம் நகர், ராஜஸ்தான் மாநிலம் கோட்டா, மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ், குஜராத் மாநிலம் வதோதரா, ஆந்திர மாநிலம் ஏலூரு, பஞ்சாப் மாநிலம் ராஜபுரா ஆகிய இடங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் சில்லரை வணிகர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், காணொலி மூலம் பங்கேற்ற அமைச்சர் அவர்களுடன் கலந்துரையாடினார்.
பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ் மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று கூறிய அமைச்சர், பிரதமரின் கிசான் சம்மான் நிதி மூலம் நிதியுதவி, அறிவியல் கண்டுபிடிப்பு மூலம் நானோ யூரியா, மாற்று உரங்கள் ஆகியவை வழங்கப்படுவதாக தெரிவித்தார். விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்ட அமைச்சர், உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கச்செய்வதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருவதாக கூறினார். உலகளவில் பல்வேறு சிக்கல்கள் நிலவிய போதிலும், மத்திய அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு உரங்கள் கிடைப்பதை உறுதிசெய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கருத்துகள்