தூய்மைப் பணியாளர்கள் ஓய்வூதியம் பெற உரிமை உண்டு- உச்சநீதிமன்றம் தீர்ப்பு, தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ரூபாய் 1 லட்சம் அபராதம் விதிப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகில் விரிகோடை லட்சுமணன். அரசு பள்ளியில் தூய்மைப் பணியாளராக 1992 ஆம் ஆண்டு சேர்ந்தவருக்கு ஆரம்ப கால தொகுப்பு ஊதியமாக மாதம் ரூபாய் 150. மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் 2002 ஆம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டதையடுத்து 2012. ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். பணி நிரந்தரப்படுத்துவதற்கு முன் உள்ள சேவையை கணக்கில் எடுத்துக் கொண்டு தனக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டுமென விண்ணப்பித்தவருக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அவ்வாறு கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க முடியாதென மறுத்ததையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத் தனி நீதிபதி, லட்சுமணனுக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்குமாறு 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில்
வழக்கை 2020 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்த நிலையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் லட்சுமணனுக்கு வழங்கவேண்டிய ஓய்வூதியப் பலன்களைக் கணக்கிட்டு 8 வாரங்களுக்குள் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டதையடுத்து அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி தள்ளுபடி செய்ததனால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்
உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ததுடன் ரூபாய் 1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு விசாரித்தது நீதிபதி வழங்கிய தீர்ப்பில், லட்சுமணனுக்கு அவருடைய ஓய்வூதிய பலன்களை பெற உரிமை உள்ளது. உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டும் தூய்மை பணியாளருக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்காமல் இத்தனை ஆண்டு காலமாக இந்த வழக்கை தேவையில்லாமல் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை இழுத்தடித்துள்ளது.எனவே ரூபாய் 1 லட்சம் அபராதத்தை தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வி துறை செலுத்துமாறு உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார். மேலும் தமிழ்நாடு அரசு செலுத்தும் ரூபாய் 1 லட்சம் அபராததை உச்சநீதிமன்ற ஊழியர்கள் நலச் சங்கத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை இழுத்தடித்ததற்கான செலவை அரசு அதிகாரிகளிடமே வசூலிக்க லட்சுமணனுக்கு உரிமை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.பொதுவாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 90 நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது. ஆனால் லட்சுமணன் வழக்கு விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் கொரோனா பரவல் காலகட்டத்தை சேர்க்காமல் 156 நாட்கள் தாமதமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்தக் காலதாமதமாக மேல்முறையீடு செய்ததற்கு தமிழ்நாட அரசு எந்தஒரு உறுதியான காரணத்தையும் கூறவில்லை. எனவே ஒட்டுமொத்தமாக பார்த்தால் தமிழ் நாடு அரசின் மேல்முறையீட்டு மனு தாமதத்தை இந்த நீதிமன்றம் ஏற்கவில்லை என்றும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்திருந்தார். தூய்மை பணியாளரின் ஓய்வூதிய உரிமைகளை காத்து அவருக்கு சாதகமான தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றத்தின் உத்தரவானது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் சமீபத்திய கருத்துகளுடன் ஒத்துப் போகின்றன. சாமானிய மனிதர்களின் கஷ்டங்களையும் போராட்டங்களையும் கேட்பதற்காக உச்சநீதிமன்றம் உள்ளது. குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதே நீதிமன்றங்களின் முக்கிய பங்கு என தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப்பிடுவார் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.
கருத்துகள்