தென்னை மரம் ஏறுவோருக்கான கேரா சுரக்ஷா காப்பீட்டுத் திட்டம்
தென்னை மரம் ஏறுவோருக்காக நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கேரா சுரக்ஷா காப்பீட்டுத் திட்டத்தை தென்னை வளர்ச்சி வாரியம் அமல்படுத்தி வருகிறது.
இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விபத்து ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் ரூ.1 லட்சம் வழங்கப்படும். பயிற்சி பெறுபவர் அனைவருக்கும் பயிற்சியாளர்களுக்கும் ஒரு வருட இலவச காப்பீட்டுத் தொகையை தென்னை வளர்ச்சி வாரியம் வழங்க உள்ளது.
இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.375 செலுத்தப்பட வேண்டும். இதில் ரூ.281-யை வாரியம் செலுத்த உள்ளது. காப்பீட்டை புதுப்பிக்க விரும்புவோர், ரூ.94 மட்டும் செலுத்தினால் போதும். 18 வயது முதல் 65 வயதுடைய பாரம்பரிய தென்னை மரம் ஏறுவோர் ஆண்டுக்கு ரூ.94 செலுத்தி இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
ரூ.94-ஐ ஆன்லைன் மூலம் செலுத்தலாம் அல்லது எர்ணாகுளத்தில் செலுத்தப்படக் கூடியதாக COCONUT DEVELOPMENT BOARD என்ற பெயரில் கேட்பு வரைவோலை மூலமும் செலுத்தலாம். இது குறித்த விவரங்களை www.coconutboard.gov.in என்ற இணையதளம் மூலமோ அல்லது புள்ளியியல் பிரிவு, தென்னை வளர்ச்சி வாரியம், கொச்சி என்ற முகவரியில் அறிந்து கொள்ளலாம். இத்தகவலை விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு உதவி இயக்குநர் மினி மாத்யூ தெரிவித்துள்ளார்.
கருத்துகள்