சாட்சிகளின் வாக்குமூலத்தை ஒலிஒளிப் பதிவு செய்ய கீழமை நீதிமன்றங்களுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
Madras High Court - SATHEESH KUMAR Vs. THE INSPECTOR OF POLICE Crl.A(MD)Nos.482 and 513 of 2017 dated 04 October, 2019 ன்படி
குற்ற வழக்குகளில் சாட்சிகள் பிசாட்சியாக மாறுவதைத் தடுக்க கீழமை நீதிமன்றங்களிலும் சாட்சிகளின் வாக்குமூலத்தை ஆடியோ மற்றும் விடியோவில் பதிவு செய்ய வேண்டுமென சென்னை உயா்நீதிமன்றம் மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தமிழ் நாட்டில், கீழமை நீதிமன்றங்களில் குற்ற வழக்குகளில் சாட்சிகள் ஒரு விதமாகவும், மேல் முறையீட்டின் போது வேறு விதமாகவும் மாற்றி
வாக்குமூலம் அளிக்கின்றனா். இது போன்ற பிறழ் சாட்சியால் குற்றவாளிகள் விடுதலையாவது அதிகரித்துள்ளதனால் நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை கேள்விக்குறியாகி விடும்.
சாட்சிகளின் வாக்குமூலம் மாறாமலிருக்க ஆடியோ, விடியோ பதிவு செய்யலாம் என குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் 2009 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தும், இதுவரை சாட்சிகளின் வாக்குமூலங்கள் அவ்வாறு பதிவு செய்யப்படவில்லை. வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் போது, சாட்சிகள் மாறுவதற்கு வாய்ப்பு ஏற்படாது. எனவே குற்ற வழக்குகளில் சாட்சிகளின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதை அமல்படுத்த வழக்குரைஞா்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்க வேண்டுமென ஒரு வழக்கு விசாரணையின் போது சென்னை உயா்நீதிமன்றம் மதுரைக் கிளை நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், என். ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த நவம்பா் 8 ஆம் தேதி உத்தரவிட்டிருந்ததையடுத்து,, சென்னை உயா்நீதிமன்றம் மதுரைக் கிளை வழக்குரைஞா்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நீதிபதிகளிடம் கருத்து தெரிவித்தனா். அதையடுத்து, இது தொடா்பான தீா்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனா்.
இந்நிலையில், நீதிபதிகள் அமா்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு: குற்ற வழக்குகளில் சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறுவதைத் தடுக்கும் வகையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கீழமை நீதிமன்றங்களிலும், சாட்சிகளின் வாக்குமூலத்தை ஆடியோ மற்றும் விடியோவில் பதிவு செய்ய வேண்டும்.
இது தொடா்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்றம் முன்பே பிறப்பித்துள்ள உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும். சாட்சிகள் பாதுகாப்பு தொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும். ஆடியோ, விடியோ பதிவு செய்வற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு மூன்று மாதத்திற்குள் செய்து தர வேண்டும். இது தொடா்பான அறிக்கையை ஏப்ரல் முதல் தேதி தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டனா்.
கருத்துகள்