சர்வதேச சொகுசு கப்பல் எம். எஸ். அமிரா தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வருகை
எம். எஸ். அமிரா (M.S. Amera) என்ற சர்வதேச சொகுசு கப்பல் சுமார் 698 பயணிகள், 386 கப்பல் பணியாளர்களுடன் இன்று (11 ஜனவரி) முதன் முறையாக தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த பயணிகள் கப்பலானது நைஸ் பிரான்ஸ் (Nice- France) நாட்டில் இருந்து 22.12.2022 அன்று புறப்பட்டு மால்டா - எகிப்து - ஓமன் நாடுகள் மார்க்கமாக பயணத்தை மேற்கொண்டு மும்பை துறைமுகத்தை 08.01.2023 அன்று வந்தடைந்தது. மேலும் கொச்சி துறைமுகத்திற்கு 10.01.2023 வந்தடைந்து வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை இன்று வந்தடைந்தது.
கப்பல் பயணிகள் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் வருகை மற்றும் புறப்பாடு செயல்பாடுகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வது மட்டுமல்லாமல் பயணிகள் துறைமுக வருகை மறக்க முடியாத அனுபவமாக இருப்பதற்கான அனைத்து முயற்சிகளும் துறைமுக நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டன.
வ. உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் திரு தா. கி. ராமச்சந்திரன், இ.ஆ, ப. கப்பலின் கேப்டன் கியூபர்ட் வோலோவை நினைவுப் பரிசு வழங்கி வரவேற்றார். அப்போது, தென்தமிழகத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் அமைந்திருப்பதை கருத்தில் கொண்டு, இது போன்ற பயணிகள் கப்பல் வருவதினால் வருங்காலங்களில் பல்வேறு பயணிகள் கப்பல் இயக்குபவர்களுடன் துறைமுகம் இணைந்து தூத்துக்குடிக்கு பல்வேறு சுற்றுலா பயணிகள் வருவதற்கான அனைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்
இந்த பயணிகள் கப்பலானது 204 மீட்டர் நீளமும், அதிகபட்சம் 44.8 மீட்டர் காற்று வரைவு, 13 அடுக்குகள் மற்றும் 413 தங்கும் அறைகளுடன், 835 பயணிகளைக் கொண்டு செல்லும் திறன் கொண்டது. இக்கப்பல் அதிகபட்சமாக 20.5 நாட்ஸ் (Knots) (38 ஒருமணி நேரத்திற்கு ) வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த கப்பலில் 3 உணவங்கள், ஓய்வறைகள், நூலகங்கள், விளையாட்டு மற்றும் நீச்சல் குளங்கள் அமைந்திருப்பது சிறப்பம்சம் ஆகும்.
மீண்டும் இப்பயணிகள் கப்பலானது இன்று மாலை 7 மணியளவில் கொழும்பு துறைமுகத்திற்கு தனது பயணத்தை துவங்கி வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி ஜெர்மனி நாட்டை வந்தடைய உள்ளது.
இந்த நிகழ்வில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய துணைத் தலைவர் திரு. பிமல்குமார் ஜா, கடல்துறைமுக குடியேற்ற மாவட்ட துணை கண்காணிப்பாளர் திரு. எம். ராதாகிருஷ்ணன். இ.கா.ப., சுங்கத்துறை இணை ஆணையர் திரு டி.சித்தார்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இத்தகவலை வ. உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை துறைமுகத்திற்கு வருகை தந்த வெளிநாட்டு சொகுசு கப்பல்
எம் வி லே சாம்ப்லேய்ன் என்ற பயணிகள் சொகுசுக் கப்பல் இலங்கையின் திரிகோணமலையிலிருந்து 108 பயணிகள் மற்றும் 118 குழுவினருடன் சென்னை துறைமுகத்திற்கு நேற்று (ஜனவரி 10) வந்தடைந்தது. கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு சென்னை துறைமுகம் வந்தடையும் முதல் சர்வதேச பயணிகள் கப்பல் இதுவாகும்.
இந்த கப்பலின் பயணிகள் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகம், சாந்தோம் தேவாலயம், கபாலீஸ்வரர் கோயில் மற்றும் தக்ஷின் சித்ரா போன்ற இடங்களை காண திட்டமிட்டுள்ளதாக சுற்றுலா சேவை வழங்குனர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை துறைமுக ஆணையத் தலைவர் திரு சுனில் பலிவால் இ.ஆ.ப சென்னை துறைமுகத்தின் வரலாற்று முக்கியத்துவத்தையும், இந்தியாவில் சர்வதேச கப்பல் சுற்றுலாவை ஊக்குவிப்பதில் இத்துறைமுகத்தின் பங்கினை குறித்தும் தெரிவித்தார். மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகள், கப்பல் முகவர் நிறுவனங்கள் ஆகியவற்றின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார். கொரோனாவுக்கு பிறகான காலக்கட்டத்தில் இதுபோன்ற நவீன சொகுசுக் கப்பலை ஈர்க்கும் விதமாக இந்த துறைமுகம் மாற்றம் பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த சொகுசு கப்பல் இலங்கைக்கு இன்று (ஜனவரி 11) புறப்படுகிறது. இத்தகவல் சென்னை துறைமுக ஆணைய செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்