மாணவர்கள் நினைத்தால் தான் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் வலியுறுத்தல்
மாணவர்கள் வரலாற்றைத் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தியாகிகளை நாம் தெரிந்து வைத்திருக்கவில்லை. அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகிகள் பலர் இருக்கிறார்கள். கட்டபொம்மன், வ.உ.சி. போன்றோரைத் தெரிந்து கொள்வதோடு நம் பகுதியைச் சேர்ந்த தியாகிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள்தான் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதற்கு அவர்கள் தங்களைத் தகுதி படுத்திக் கொள்ள வேண்டும் என்று காஞ்சிபுரம் தொகுதி மக்களவை உறுப்பினர் திரு.க.செல்வம் தெரிவித்தார்.
இந்திய அரசின் தமிழ்நாடு- புதுச்சேரி மண்டல மத்திய மக்கள் தொடர்பக அலுவலகம் செங்கல்பட்டில் ஏற்பாடு செய்துள்ள 5 நாட்கள் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், மக்கள் நலத் திட்டங்கள் & சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கண்காட்சியில் துவக்க உரையாற்றிய போது திரு.செல்வம் இவ்வாறு தெரிவித்தார்.
சிறுதானியங்கள் உற்பத்தயை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழ்நாட்டில் தருமபுரி மற்றும் தென்காசி மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து உள்ளது. சிறுதானியங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவு என பரிந்துரைக்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் குடும்பத்தில் சிறுதானியங்கள் பயன்பாட்டை உருவாக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் செல்வம் மேலும் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சிக்கு சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பக கூடுதல் தலைமை இயக்குநர் திரு.மா. அண்ணாதுரை தலைமை வகித்தார். நாம் சுதந்திரம் பெற்றதால் தான் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வளர்ச்சியின் பயன்பாடுகளை அனுபவிக்கிற நாம் நமது முன்னோர்களின் தியாகத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். மக்கள் நலத் திட்டங்கள் குறித்த தகவல்களை மாணவர்கள் தெரிந்து கொண்டு அவை குறித்து தங்கள் பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று திரு.அண்ணாதுரை கேட்டுக் கொண்டார்.
செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திருமதி வரலட்சுமி மதுசூதனன் தனது கருத்துரையில் மாணவர்கள் பாலினச் சமத்துவத்தைப் பேண வேண்டும். சிறுவயதில் இருந்தே சமத்துவ மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். யாரிடமும் அதிகார மனப்போக்கு டன் நடந்து கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் பா.பரணிதரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் திருமிகு க.சற்குணா, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா மற்றும் வேலூர் ஸ்ரீ புற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையத்தின் டாக்டர் டி.பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆரோக்கிய குழந்தை போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மக்களவை உறுப்பினர் திரு செல்வமும் சட்ட மன்ற உறுப்பினர் திருமதி வரலட்சுமியும் பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாரதியார் பாடல்கள் புத்தகம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து துறை, சுகாதார துறை, அஞ்சல் துறை, உணவு பாதுகாப்பு துறை , மாவட்ட காசநோய் துறை மற்றும் ஸ்ரீ புற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையம் ஆகியவற்றின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
முன்னதாக புதுச்சேரி மத்திய மக்கள் தொடர்பக துணை இயக்குநர் முனைவர் சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். நிறைவில் புதுச்சேரி கள விளம்பர உதவி அலுவலர் திரு வீரமணி நன்றி கூறினார்
கருத்துகள்