36 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய தயாராக உள்ள எல்விஎம்3- எம்3 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் தொடங்கியது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனியார் செயற்கைக்கோள்களை ஒப்பந்த அடிப்படையில் விண்ணிற்கு அனுப்பி வருகிறது. அதனடிப்படையில் இங்கிலாந்தை சேர்ந்த ஒன் வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவின் வணிகப்பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி இந்தியா கடந்த 2022 அக்டோபர் 23 அன்று ஒன் வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதேபோல் தற்போது ஒன் வெப் நிறுவனத்தின் மீதமுள்ள 36 செயற்கைக்கோள்களை இஸ்ரோ நாளை விண்ணில் செலுத்த உள்ளது. 5,805 கிலோ மொத்த எடை கொண்ட செயற்கைக்கோள்களை எல்விஎம்3 - எம்3 ராக்கெட் (ஜிஎஸ்எல்வி மார்க் 3) விண்ணிற்கு சுமந்து செல்கிறது. இந்த செயற்கைக்கோள்கள் 450 கிலோமீட்டர் தொலைவில் 87.4 டிகிரி கோணத்தில் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2 வது ஏவுதளத்திலிருந்து மார்ச் 26 ஆம் தேதி (நாளை) காலை 09:00 மணிக்கு ராக்கெட் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 24 மணி நேர கவுண்டவுன் இன்று காலை தொடங்கியது. எல்விஎம்3- எம்3 ராக்கெட் சந்திரயான் -2 உள்ளிட்ட முக்கிய ஏவுதலில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்