திருச்சிராப்பள்ளி கருமண்டபத்திலுள்ள ஒரு வீட்டில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் .17 ஆம் தேதி 13 பவுன் நகை, ரூபாய்.17 ஆயிரம் ரொக்கம், ஒரு கை மடிக் கணிப்பொறி உள்ளிட்டவை களவு போனது.
அதை மீட்கச் சென்ற திருச்சிராப்பள்ளி தனிப்படையை சிறைபிடித்து வைத்த இராஜஸ்தான் காவல்துறை பொய்யான இலஞ்சப் புகார் எனத் தெரிந்து விடுவித்தது
இதுதொடர்பாக இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் பினய் பகுதி ரத்தன் (வயது 38), சங்கர் (வயது 25), அவரது சகோதரர் ராம்பிரசாத் (வயது 25), ராமா (வயது 40) ஆகியோரை செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவில் காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில், இவர்கள் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் திருட்டில் ஈடுபட்டது தெரிந்ததையடுத்து திருட்டு நகைகளை மீட்க திருச்சிராப்பள்ளி கன்டோன்மென்ட் காவல்துறை உதவி ஆணையர் கென்னடி, ஆய்வாளர்கள் மோகன், ஷியாமளா தேவி, சார்பு ஆய்வாளர் உமா உள்ளிட்ட 15 பேர் கொண்ட தனிப்படை காவல்துறையினர் ரத்தன், சங்கரை கூட்டிக் கொண்டு வேனில் இராஜஸ்தான் சென்றனர்.அங்குள்ள அஜ்மீர் மாவட்டத்திலுள்ள உள்ளூர் காவலரின் உதவியுடன், ரத்தன் தெரிவித்த ஒரு நகைக்கடை வியாபாரியைச் சந்தித்த திருச்சிராப்பள்ளி காவல்துறையினர், அவரிடமிருந்து 300 கிராம் தங்கம், ரூபாய்.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த பின், மற்றொரு நகை வியாபாரியான பர்னலாலைத் தேடிச் சென்றபோது, அவர் தப்பிச் சென்றுவிட்டதனால், அவரது மனைவி சானியாவிடம் விசாரித்தனர்.
அப்போது திருச்சிராப்பள்ளி காவல்திறையினரைத் தொடர்பு கொண்ட சானியாவின் சகோதரர் லட்சுமணன், திருட்டு நகைகளை விற்றுவிட்டதாகவும், அதற்குப் பதிலாக ரூபாய்.25 லட்சம் பணம் கொடுத்து விடுவதாகவும் கூறியுள்ளார். திருச்சிராப்பபள்ளி காவலர்கள் லட்சுமணன் கூறியபடி, சானியாவை அழைத்துக் கொண்டு வேனில் அஜ்மீர் சென்றனர்.
இதற்கிடையே, திருட்டு வழக்கில் தனது சகோதரியை கைது செய்யாமலிருக்க திருச்சிராப்பள்ளி தனிப்படை காவலர்கள் லஞ்சம் கேட்பதாக அஜ்மீரிலுள்ள இலஞ்ச ஒழிப்புத் துறையில் லட்சுமணன் புகார் செய்துள்ளார். அதை நம்பிய இராஜஸ்தான் விஜிலன்ஸ் நேற்று முன்தினம் மாலை அஜ்மீரிலிருந்த இன்ஸ்பெக்டர் மோகன், சப் இன்ஸ்பெக்டர் உமா உள்ளிட்ட 12 பேரை சிறைபிடித்து விசாரணைக்குக் கூட்டிச் சென்றனர்.
அதையறிந்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, திருச்சிராப்பள்ளி மாநகரக் காவல்துறை ஆணையர் சத்தியப்பிரியா உள்ளிட்டோர் இராஜஸ்தான் காவல் உயரதிகாரிகளைத் தொடர்புகொண்டு சம்பவங்களை விளக்கினர். அதையடுத்து, தமிழ் நாடு தனிப்படைக் காவலர்களை இராஜஸ்தான் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் 21 மணி நேரத்துக்குப் பின் நேற்று முன்தினம் மாலை விடுவித்தனர். பிறகு பறிமுதல் செய்யப்பட்ட 300 கிராம் தங்கம் உள்ளிட்டவற்றுடன் திருச்சிராப்பள்ளி தனிப்படைக் காவல்துறை வேனில் தமிழ்நாடு புறப்பட்டனர்.
இதற்கிடையே, ஜெய்ப்பூரிலிருந்து விமானத்தில் அழைத்து வரப்பட்ட ரத்தன், சங்கர் ஆகிய இருவரும் நேற்று முன்தினமே ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து திருச்சிராப்பள்ளி காவல்துறை ஆணையர் எம்.சத்திய பிரியா 'செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘திருடர்கள் மற்றும் நகை வியாபாரிகளின் உறவினர்கள் திருச்சிராப்பள்ளி காவலர்களைச் சிக்க வைப்பதற்காக, லஞ்சம் கேட்பதாக பொய் புகார் அளித்தனர். முதலில் அதை உண்மை என நம்பிய இராஜஸ்தான் லஞ்ச ஒழிப்புத் துறையினர், பிறகு தரப்பட்ட விளக்கத்தை ஏற்று உண்மை நிலையை அறிந்து கொண்டு நேற்று அனைவரையும் விடுவித்தனர் எனத் கூறினார்.
கருத்துகள்