மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் காவல்துறை ஆணையர்
அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் ஒரு பலச்சாறு குளிர்பானக்கடையில் பிரட் ஆம்லெட், சாக்லேட், ஜூஸ் ஆகியவை ஓசியில் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக ஆதாரமாக காணொளி வெளிவந்து எழுந்த புகாரின் படி கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு நபர்களைப் பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் காவல்துறை ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். சென்னை கூடுவாஞ்சேரியிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணி செய்பவர் விஜயலட்சுமி. அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் ஜெயமாலா உள்ளிட்ட நான்கு நபர்கள் சில தினங்களுக்கு முன் படப்பையில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது அதே பகுதியில் இருக்கும் பழச்சாறு விற்கும் கடைக்குச் சென்று விற்பனையாளர்களிடம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு காவலர்களும் ஜூஸ் ,பிரட் ஆம்லெட், சாக்லேட், குடிநீர் போத்தல்களை இலவசமாகத் தரும்படி கேட்டு, தகராறில் ஈடுபட்டதோடு
கடை உரிமத்தையும் இரத்து செய்து விடுவதாக மிரட்டிச் சென்றனர். இது சம்பந்தமாக கடையின் உரிமையாளர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு தாம்பரம் மாநகர காவல்துறை ஆய்வாளர் அமல்ராஜ் நடத்திய விசாரணையில் பழச்சாறுக் கடையில் இரவு பணியில் இருந்த நான்கு காவலர்களும் பொருட்கள் கேட்டு இரகளையில் ஈடுபட்டது சந்தேகமின்றி உறுதியானது.
அதையடுத்து காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, ஜெயமாலா உள்ளிட்ட நான்கு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தற்போது உத்தரவிட்டுள்ளார். அவர்கள் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கின்றனர். ஓசியில் ஜூஸ் கேட்டு தகராறில் ஈடுபட்ட காரணத்தால் நான்கு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஊழலுக்கு எதிரான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
கருத்துகள்