குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களைக் கண்காணிப்பதற்கான 'மாசி' இணையப்பக்கம்
நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களின் (சி.சி.ஐ) நிகழ்நேர கண்காணிப்புக்கும் அவற்றின் தடையற்ற ஆய்வுக்குமான செயலியை - 'மாசி' - தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) உருவாக்கியுள்ளது. சிறார் நீதிச் சட்டம், 2015-ன் கீழ் வரையறுக்கப்பட்ட குழந்தைகள் நலக் குழுக்கள், மாநில ஆய்வுக் குழுக்கள், மாவட்ட ஆய்வுக் குழுக்கள், இளைஞர் நீதி வாரியங்களின், உறுப்பினர்கள், மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஆய்வுகளை செயல்படுத்த 'மாசி' உதவுகிறது. மேற்கூறிய அதிகாரிகளால் நாடு முழுவதும் உள்ள அனைத்து குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களையும் ஆய்வு செய்வதற்கான ஒரே தளமாக இது செயல்படுகிறது. பரிசோதனையின் சுழற்சி முடிவடைவதற்கு முன்னும் பின்னும் வழக்கமான பின்தொடர்தல் செய்யப்படுகிறது. கேள்வித்தாளை பூர்த்தி செய்து ஆணையத்தால் சமர்ப்பிக்கப்பட்டவுடன் முழுமையான அறிக்கைகள் தானாகவே இணையப்பக்கத்தில் உருவாக்கப்படும்.. 24.07.2023 நிலவரப்படி, 32 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் மாசி இணையப்பக்கத்தில் 4268 ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ளன.
சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு, சிகிச்சை, மேம்பாடு மற்றும் மறுவாழ்வுக்கான வழக்குகளை தீர்ப்பதற்கும், அவர்களின் அடிப்படை தேவைகள் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு குழந்தைகள் நலக் குழுவை நிறுவுவதைக் கட்டாயமாக்குகிறது.
வாத்சல்யா இயக்க வழிகாட்டுதலின்படி, குழந்தைகள் இல்லம் / ஒருங்கிணைந்த வீட்டு வளாகம் (குழந்தைகள் இல்லம், கூர்நோக்கு இல்லம், சிறப்பு இல்லம், பாதுகாப்பு இடம்) ஆகியவற்றில் 300 சதுர அடி பரப்பளவு கொண்ட இரண்டு அறைகள் அமைப்பதற்கு ரூ.9,25,800/- நிதி உதவி வழங்கப்படுகிறது. தற்போதுள்ள குழந்தைகள் இல்லத்திற்கு தேவையான இடவசதி இருந்தால், அது குழந்தைகள் நலக் குழுவுக்கு வழங்கப்படுகிறது. இருப்பினும், குழந்தைகள் இல்லம் இல்லாத மாவட்டங்களில் அல்லது தற்போதுள்ள குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகள் நலக் குழுவுக்கு இடமில்லை என்றால், இதற்குப் பொருத்தமான இடங்களை வாடகைக்கு எடுக்க வாத்சல்யா இயக்கத்தின் கீழ் நிதி வழங்கப்படுகிறது. குழந்தைகள் நலக் குழு அதன் அமர்வுகளை ஒரு அறையில் வைத்திருக்கிறது, மற்றொரு அறை குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கான காத்திருப்பு பகுதியாக பயன்படுத்தப்படுகிறது.
இத்தகவலை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
கருத்துகள்