தமிழ்நாடு அரசு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்தி வருகிறது: மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர்
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் 2023-க்கான இலச்சினை, சின்னம் மற்றும் சுடர் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார்
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் 2023-க்கான இலச்சினை, சின்னம் மற்றும் சுடர் ஆகியவற்றை மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் சென்னையில் நடைபெற்ற விழாவில் இன்று (22.12.2023) அறிமுகப்படுத்தினார்.
தமிழ்நாட்டில் 2024, ஜனவரி 19 முதல் 31 வரை சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெறும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் 2023-க்கான இலச்சினை, சின்னம் மற்றும் சுடர் ஆகியவற்றை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் சென்னையில் நடைபெற்ற விழாவில் அறிமுகப்படுத்தினார். தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக வீரமங்கை என பெயரிடப்பட்ட சின்னத்தையும் அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் 36 வகையான விளையாட்டுகள் இடம்பெற உள்ளன என்றும், சிலம்பம் காட்சி விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும் கூறினார். இந்த போட்டிகளில் நாடு முழுவதிலும் இருந்து 5630 விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா விளையாட்டுத் துறையில் சிறப்பாக முன்னேறி வருகிறது என்றார். ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சிறப்பாக செயல்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், பாரா ஆசிய விளையாட்டுப் போடடிகள் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளதை அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் நமது வீரர்கள் தங்களது திறன்களை பறைசாற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விளையாட்டு வீரர்களின் திறமைகளை கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாநிலங்களின் விளையாட்டு மேம்பாட்டுத் துறைகள் ஆகியவை இணைந்து நாடு முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருவதாக அவர் கூறினார். விளையாட்டுப் போட்டிகள், மதம், மொழி, இனம் ஆகியவற்றை கடந்து அனைவரையும் ஒன்றிணைப்பதாக அவர் தெரிவித்தார்.
திறன், விடா முயற்சி, குழு மனப்பான்மை ஆகியவையே வெற்றிக்கு வித்திடும் என்றும், இதுவே வாழ்க்கைக்கான பாடம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா பன்முகத்தன்மை வாய்ந்த நாடாக உள்ளது என்று கூறிய அவர், 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த நாடாக இருக்கும் தருவாயில், விளையாட்டிலும் முதன்மை சக்தியாக திகழும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியாவும் பங்கேற்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாடு பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்தியுள்ளதாக பாராட்டுத் தெரிவித்த அவர், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளையும் சிறப்பாக நடத்தும் என்று கூறினார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட மாநிலம் என்றும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலம் என்றும் அவர் தெரிவித்தார்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களை தமிழ்நாட்டு மக்கள் உற்சாகப்படுத்த வேண்டும் என்று திரு அனுராக் தாக்கூர் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் விளையாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் திரு அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் திரு ஜெ மேகநாத ரெட்டி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
கருத்துகள்