பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் மனு பாக்கர் -
ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்
பாரிஸ் ஒலிம்பிக் - 2024-ல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் ஒலிம்பிக் பதக்கமும் இதுவாகும்.
இதன் மூலம், கடந்த 20 ஆண்டுகளில் ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றுள்ளார்.
ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் (2004 ஏதென்ஸ்), அபினவ் பிந்த்ரா (2008 பெய்ஜிங்), விஜய் குமார் (2012 லண்டன்) மற்றும் ககன் நரங் (2012 லண்டன்) ஆகியோருக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற ஐந்தாவது இந்திய துப்பாக்கி சுடும் வீரர் என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றார்.
ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
முக்கிய அரசு உதவிகள்:
ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் லக்சம்பர்க்கில் தனிப்பட்ட பயிற்சியாளர் திரு ஜஸ்பால் ராணாவிடம் பயிற்சி பெற உதவி
ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்டத்தின் கீழ் நிதி உதவி: ரூ. 28,78,634/-
பயிற்சி, போட்டிகளுக்கான வருடாந்திர நாட்காட்டியின் கீழ் நிதி உதவி (ACTC) ரூ. 1,35,36,155 .
சாதனைகள்:
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (2022) 25 மீட்டர் பிஸ்டல் அணி பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்
பாகுவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் (2023) இல் 25 மீட்டர் பிஸ்டல் அணி பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்
போபாலில் நடந்த உலகக் கோப்பையில் (2023) 25 மீட்டர் பிஸ்டலில் வெண்கலப் பதக்கம் வென்றார்
கெய்ரோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் (2022) 25 மீட்டர் பிஸ்டலில் வெள்ளிப் பதக்கம் வென்றார்
செங்டுவில் நடந்த உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் (2021) 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர், பெண்கள் அணி போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்றார்
பின்னணி:
இந்திய ஒலிம்பிக் வீரர் மனு பாக்கர் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையாவார். குத்துச்சண்டை, மல்யுத்த வீரர்களுக்கு பெயர் பெற்ற மாநிலமான ஹரியானாவின் ஜஜ்ஜாரில் பிறந்த மனு பாக்கர், பள்ளியில் டென்னிஸ், ஸ்கேட்டிங், குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளார். 'தாங் டா' எனப்படும் தற்காப்புக் கலை போட்டியிலும் பங்கேற்று தேசிய அளவில் பதக்கங்களை வென்றுள்ளார்.
பயிற்சி தளம்: டாக்டர் கர்னி சிங் துப்பாக்கி சுடும் தளம், புது தில்லி
பிறந்த இடம்: ஜஜ்ஜர், ஹரியானா ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்குப் பிரதமர் வாழ்த்து
பாரீஸ் ஒலிம்பிக் 2024-ல் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"வரலாற்றுச் சிறப்புமிக்க பதக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் (#ParisOlympics2024!) இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றதற்காக மனு பாக்கருக்கு ( @realmanubhaker ) வாழ்த்துகள். வெண்கலம் வென்றதற்குப் பாராட்டுகள். இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையை மனுபாக்கர் பெற்றுள்ளார். அபாரமான சாதனை! #Cheer4Bharat"
கருத்துகள்