நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில் இரண்டரை கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள நிலத்தை நில அளவை செய்து கொடுக்க அல்லது அத்து மால் செய்ய இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு வாங்கிய புகாரில் வருவாய் துறை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்திலுள்ள தோட்டமூலா குரூப் கிராமத்தில் வசிக்கும் உம்மு சல்மா (வயது 34) பட்டதாரியாவார். இவரது குடும்பத்தினருக்குச் சொந்தமாக 3.27 ஏக்கர் நிலம் உள்ளது இந்த நிலையில் 2015-ஆம் ஆண்டு உம்மு சல்மாவின் தாயார் காலமானார் கடந்தாண்டு அவரது தந்தை மற்றும் சகோதரர்களும் இறந்து விட்டதனால் சொத்தில் தந்தையின் பங்காக 36 சென்ட் பரப்பளவில் உள்ள நிலம் உம்மு சல்மாவுக்கு வந்தது. மேலும் அவரது பெரியப்பா வகையில் 6 சென்ட் நிலம் எழுதி கொடுக்கப்பட்டிருந்ததன்படி கூடலூர் பகுதியில் தனக்கு மொத்தம் உள்ள 42 சென்ட் நிலத்தை புல எல்லை வரையறை செய்வதற்காக கடந்த 17.9.2023 அன்று கூடலூர் வருவாய் வட்டாட்சியர் ராஜேஸ்வரியிடம், உம்மு சல்மா விண்ணப்பித்தார். அதற்கு ஆன்லைன் கட்டணம் ரூபாய்.820 ம் செலுத்தியுள்ளார், அதன் பின்னரும் உரிய நடவடிக்கை எடுத்து அளக்க வில்லை. அதனால் கடந்த மார்ச் மாதம் 4 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் உம்மு சல்மா வழக்குத் தொடர்ந்ததை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 4-வது பிரதிவாதியாக கூடலூர் வட்டாட்சியர் உள்ளதால் அவரை நியமித்து உடனடியாக நில அளவீடு செய்து எல்லை வரையறை செய்யும் படி உத்தரவிட்டது.
அதன்பின்னர் நீலகிரி மாவட்டம் கூடலூர் வருவாய் வட்டாட்சியர் ராஜேஸ்வரியை, நிலத்தை அளக்க வேண்டுமென்று உம்மு சல்மா அணுகினார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாமல் உம்மு சல்மாவிடம் கூடலூர் வருவாய் வட்டாட்சியர் ராஜேஸ்வரி ரூபாய்.2 லட்சம் லஞ்சம் கேட்டதனால் மிகுந்த அதிர்ச்சியும், அதிருப்தியுமடைந்த உம்மு சல்மா, அவர் கேட்ட லஞ்சம் தர விரும்பாததால் நீலகிரி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க முடிவு செய்ததன் படி உதகமண்டலம் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்தார். அவர்கள் வருவாய் வட்டாட்சியர் ராஜேஸ்வரியை பொறி வைத்துப் பிடிக்கத் திட்டமிட்டு நேற்று முன்தினம் இரவு உம்மு சல்மாகொண்டு வந்த பணம் ரூபாய் .20 ஆயிரத்தை அரசு சாட்சிகள் முன்பு பினாப்தலின் ரசாயனப் பொடி தடவிய பின் ரூபாய்.20 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்து கூடலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் இராஜேஸ்வரியைச் சந்திக்குமாறு கூறினார்கள்.
அதை அரசு சாட்சிகள் முன்னிலையில் இராஜேஸ்வரியிடம் இவ்வளவு பணம் தான் என்னிடமுள்ளது எனக்கூறி கொடுத்திருக்கிறார். அதை வருவாய் வட்டாட்சியர் இராஜேஸ்வரி வாங்கிக் கொண்டார். அப்போது அவரை மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணம் பெற்ற கையுடன் பிடித்து சோடியம் கார்பனேட்டு கரைசலில் நனைத்து உறுதி செய்து பின்னர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் சேர்ந்தனர்.
கருத்துகள்