அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் இனி ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் பழிக்கு பழியாக நடந்த படுகொலை சம்பவம் எதிரொலி அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு.
திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த மாயாண்டி என்பவரை நீதிமன்ற வாயிலில் வைத்து ஏழு பேர் கொண்ட கும்பல் வெட்டிப்படுகொலை செய்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்ததன்படி இந்த வழக்கு நேற்று மீண்டும் அதே அமர்வில் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் மற்றும் மாநில அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் சீலிட்ட அறிக்கையை தாக்கல் செய்த போது நீதிபதிகள்: காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரான உய்யகாட்டான் என்பவர் கொலையாளிகளில் ஒருவரை வழக்கறிஞர்களின் உதவியுடன் விரட்டிச் சென்று பிடித்தவரைப் பாராட்டுகிறோம். அவருக்கு உரிய வெகுமதி மற்றும் நற்சான்றிதழை அரசு வழங்குவதுடன் அவருடைய பணிப்பதிவேட்டிலும் பதிவு செய்ய வேண்டும். அதே நேரம் மற்ற காவலரும், அலுவலர்களும் என்ன செய்து கொண்டிருந்தனர்? இந்தக் கொலை சம்பவம் எங்கு நடந்துள்ளது என்பது தான் கவலை கொள்ள வைக்கிறது. நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே ஒருவரை விரட்டிகொலை செய்ய முடிகிறதென்றால் சாட்சிகள் எப்படி துணிச்சலாக சாட்சியமளிக்க முன்வருவார்கள். காவல்துறையினர் பணி நேரத்திலும் கூட செல்போனில் தான் அதிகமாக மூழ்கிகா கிடக்கின்றனர். நாங்கள் நீதிமன்றத்துக்கு வரும் வழியில் போக்குவரத்துக் காவலர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பதைக் கண்கூட்டாகவே பார்க்கிறோம்.இந்தக் கொலை சம்பவம் நடந்தபோது பாதுகாப்புப் பணியிலிருந்து தவறிழைத்த காவலர்கள் மற்றும் அலுவலர்கள் மீது திருநெல்வேலி காவல்துறை ஆணையர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரந்தரமாக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும் வரை இடைக்காலமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் தேவையான ஆயுதம் தாங்கிய காவலரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டு அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜனவரி மாதம்.7-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு வழங்க காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்